பர்கூர் அருகே கேரளாவுக்கு 27 எருமை மாடுகள் ஏற்றிச்சென்ற லாரி கடத்தல்

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கேரளாவுக்கு 27 எருமை மாடுகள் ஏற்றிசென்ற லாரியை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.

Update: 2022-01-07 13:59 GMT

லாரியுடன் கடத்திச்செல்லப்பட்ட எருமை மாடுகள்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து 27 எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று கேரளா மாநிலம் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சையத்பாஷா (வயது 50) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருக்கு உதவியாளர்களாக ஐதர் அலி (25), முகமது ரபீக் (27), சுதாகர் (26) ஆகிய 3 பேரும் லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஒரப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக டிரைவர் சையத் பாஷா லாரியை நிறுத்தியுள்ளார். அவருடன் உதவியாளர்களும் கீழே இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த லாரியை பின் தொடர்ந்து 3 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்துள்ளனர். அந்த கும்பல் லாரியை ஓட்டுlர் நிறுத்தியவுடன் லாரியில் இருந்து இறங்கியவர்களை மடக்கியுள்ளனர். பின்னர் அவர்களை கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்தியுள்ளனர்.

காரில் வந்த மூன்று பேரில் ஒருவர் லாரியை கடத்தி சென்றுள்ளார். மேலும் லாரி டிரைவர் சையத்பாஷா மற்றும் அவரது உதவியாளர்கள் மூன்று பேரையும் கத்தியை காட்டி காரில் ஏற்றிச்சென்று கிருஷ்ணகிரி அவதானபட்டி ஏரிக்கரை அருகே இறக்கி விட்டு அந்த மர்ம கும்பல் மாடுகளுடன் லாரியை கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் லாரியின் ஓட்டுனர் சையத் பாஷா லாரியின் உரிமையாளரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். கடத்தப்பட்ட லாரியில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் லாரி இருக்கும் இடத்தை பார்த்த லாரியின் உரிமையாளர் லாரி தமிழக-கர்நாடக மாநில எல்லையில் நின்று கொண்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து கந்திகுப்பம் காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போலிசார் லாரியை மீட்டனர். அதில் கடத்தப்பட்ட 27 எருமை மாடுகளில் 14 எருமை மாடுகளை கடத்திவிட்டு லாரியை மர்ம கும்பல் நிறுத்திவிட்டு சென்றது தெரியவந்தது.

பின்னர் 13 எருமை மாடுகளுடன் லாரியை மீட்ட போலீசார், எருமை மாடுகள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லாரியையும், மாடுகளையும் கடத்தப்பட்ட மர்ம கும்பல் யார்..? எதற்காக கடத்தி சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News