கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஆய்வு

பர்கூர் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, உணவு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Update: 2021-04-29 05:45 GMT

பர்கூர் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாநில எல்லைகளில் வாகனங்களை ஆய்வுக்கு பிறகு அனுமதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று வருகை புரிந்தார். 

அங்கு கொரோனா பாதித்து அனுமதிக்கப்பட்டுள்ள 125 நோயாளிகளை சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, உணவு, அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் அவர்கள் அனைவரும் உரிய மருந்தை எடுத்துக் கொண்டு, பூரண குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது மாவட்ட தொற்றா நோய் திட்ட அலுவலர் திருலோகன், மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News