செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்

பர்கூர் அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-01 16:30 GMT

செல்போன் டவரில் ஏறும் ஒய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த புதுரோடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. மின்வாரியத்தில் போர்மேனாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும் இவரது அண்ணன் சின்னசாமி, தம்பி கண்ணுபையன் ஆகியோருக்குமிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் துரைசாமியின் நிலத்திற்கு செல்ல, நடைபாதை வழங்காத தனது சகோதரர்கள் மீதுள்ள கோபத்தில் தன் வீட்டின் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்த பர்கூர் டிஎஸ்பி தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா, தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் செங்குட்டுவேலு, தாசில்தார் குருநாதன் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் கோவிந்தசாமி, ராஜ்குமார், விமல், சுபாஷ், விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அத்துடன் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. பின்னர் துரைசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் அவர் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளவதாக மிரட்டல் விடுத்து வந்தார். இதையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீயணைப்பு வீரர்கள் டவர் மீது ஏறி, அவரை பத்திரமாக கீழே இறக்கி வைத்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News