அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு

அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர்கள் சபையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-01-08 13:37 GMT

அவதானப்பட்டி மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி,  இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர்கள் சபை சார்பில் பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு இருப்பின் அவைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி என்னும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ் பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்களும் வருவாயும் வரும் நிலையில் கோவில் வளர்ச்சி அடைவதை தடுக்கும் நோக்கில் சில தனி நபர்கள் கோவிலை ஆக்கிரமித்து உள்ளனர். அறநிலையத்துறைக்கு தெரியாமல் அவர்களே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோவிலில் முறையாக கழிப்பிடங்கள், சுகாதார வளாகங்கள் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. போலி ஆவணங்கள், முத்திரைகள் தயாரித்து அதன் மூலம் தனிநபர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதில் வேலூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஆய்வினை அடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News