கனிம வளங்கள் கடத்தல் புகார், அதிகாரிகளின் சோதனை, கண் துடைப்பு என குற்றச்சாட்டு

கனிம வளங்கள் கடத்தல் புகார் தொடர்பாக அதிகாரிகளின் சோதனை கண் துடைப்பு என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

Update: 2021-07-22 13:30 GMT

கடத்தல் லாரிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் 300 முதல் 500 வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக அமைந்தது.

அதன் படி வரும் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி கொண்டு அதிக வேகத்துடன் வருவதால் சாலைகள் சேதம் ஆவதோடு விபத்துகளும் அதிகரித்தது.

இதனிடையே அதிக பாரம் மற்றும் அதி வேகம் காட்டும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் கடந்த 2 மாதங்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் சோதனையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதித்து உள்ளனர், ஆனால் அதிக பட்சமாக 50 கனரக வாகனங்கள் மட்டுமே அனுமதியுடன் செயல்படும் உள்ள நிலையில் மீதம் உள்ள அனைத்து கனரக வாகனங்களும் அனுமதி இன்றியே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது நாள் வரை அந்த வாகனங்களை பறிமுதல் செய்யாதது என் என்ற கேள்வி எழுந்துள்ளது, இதனிடையே கனிம வளங்கள் கடத்தலை தடுக்காவிட்டால் போராட்டங்கள் மேற்கொள்ள போவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 10 கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தினசரி 300 முதல் 500 வாகனங்கள் கனிம வள கடத்தலில் ஈடுபட்டு வரும் நிலையில் 10 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் என்பது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்றே கூறப்படுகிறது.

மேலும் சோதனை சாவடிகள் வழியாக மட்டுமே கனிம வளங்கள் கடத்தப்படும் நிலையில் சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்தாமல் சாலையில் ஒரு இடத்தில் மட்டும் அதிகாரிகள் நின்று சோதனை மேற்கொண்டு வாகனங்களை பறிமுதல் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே அதிகாரிகள் ஒரு இடத்தில் நின்று சோதனைகள் மேற்கொள்ளும் நிலையில் மற்ற பகுதிகள் வழியாக கனிம வளங்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவது கடத்தல் விஷயத்தில் அதிகாரிகளுக்கும் பங்கு இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News