குமரி கோவில்களில் நகை கொள்ளை சம்பவம்: குற்றவாளியை காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி

குமரியில் கோவில்களில் பூட்டை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை சம்பவத்தில் 5 நாட்களுக்கு பின் குற்றவாளியை சிசிடிவி காட்டி கொடுத்தது.

Update: 2021-10-23 15:15 GMT

கோவில் நகைகள் திருட்டு சம்பவத்தில் சிசிடிவி கேமிரா காட்சிகளில் பதிவான குற்றாவாளி.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கிரியான் தோட்டம் பகுதியில் பத்ரேஷ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே மர்ம நபர் ஒருவர் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்து கோவில் நடையை உடைத்து அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளார்.

மேலும் கோவில் அலுவலக அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அம்மன் நகைகளான தாலிச்செயின் 2, நெற்றிசுட்டி 2, கண்மலர் 2 மற்றும் தங்க பொட்டு 4 என மொத்தமாக 18 சவரன் நகையை திருடி சென்றுள்ளான். அதனை தொடர்ந்து ஐயன்விளை பகுதியில் உள்ள ஒரு தேவி கோவிலிலும் புகுந்து 3 கோவில் கதவுகளை உடைத்து அங்கு இருந்த 5 சவரன் நகைகளையும் அபகரித்து சென்றுள்ளான்.

இரண்டு கோவில்களையும் சேர்த்து 23 சவரன் நகைகளை திருடி சென்றவர்கள் குறித்த எந்த தடயமும் கிடைக்காமல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த திருட்டு சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வெள்ளை முண்டு சட்டை அணிந்து கொண்டு தோளில் பெரிய பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்து கருவறை கோவிலை உடைத்து விட்டு ஏதும் கிடைக்காத விரக்தியில் கோவில் அலுவலக அறையை உடைத்து உள்ளே நுழையும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இந்த வீடியோவில் பதிவாகி இருந்த கொள்ளையன் ஏற்கனவே பல கோவில் திருட்டுகளில் ஈடுபட்ட உண்டியல் நாராயணன் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் உண்டியல் நாராயணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News