கொரோனா பரவல்: தமிழக கேரள எல்லை சோதனை சாவடிகளில் தீவிர சோதனை

குமரியில் உள்ள தமிழக கேரள எல்லை சோதனை சாவடிகள் மூடப்பட்டு 24 மணி நேர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2021-04-11 07:15 GMT

களியக்காவிளை சோதனை சாவடியில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்கவும் சோதனைகளை அதிகப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

இந்த உத்தரவை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லை பகுதி சோதனைச் சாவடிகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து 24 மணி நேர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்,

தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நிலையில் முறையாக இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன, இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் இ-பாஸ் எடுத்து வாகனங்களில் வரும் நபர்களும், சோதனைச்சாவடி வழியாக இருசக்கர வாகனத்திலும் மற்றும் நடந்து வரும் தனி நபர்களும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மாவட்டத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து சிறு கிராமங்கள் வழியாக தமிழகம் வரும் சிறிய சாலைகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதான சாலைகளை தவிர பிற அனைத்து சாலைகளை மூடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Tags:    

Similar News