மாற்றுத்திறனாளி வீராங்கனை புறக்கணிப்பு: நீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சி

மாணவி சமிகா பர்வீன் தேசிய அளவிலான காதுகேளாதோருக்கான தடகள போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

Update: 2021-08-14 02:30 GMT

மாணவி சமிகா பர்வீன். 

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த முஜீப்- சலாமத் தம்பதியின் மகள் சமிகா பர்வீன், தனது சிறுவயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக தனது செவித் திறனை இழந்தார். சிறு வயது முதலே இவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருப்பதை கண்டுபிடித்த பெற்றோர், இவருக்கு பல்வேறு தடகளப் போட்டிகளில் பயிற்சி அளித்தனர்.

மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளதோடு, தேசிய அளவிலான காதுகேளாதோருக்கான தடகள போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கங்களை வென்றார். இந்நிலையில் வரும் 22ஆம் தேதி போலந்து நாட்டில் சர்வதேச அளவிலான தடகள போட்டி நடைபெறுகிறது, இதற்காக இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கான தகுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது.

இந்த மாணவியை டெல்லிக்கு அழைத்துச் செல்லக் இந்திய விளையாட்டு ஆனையம் முன்வராத நிலையில் திருச்சியைச் சேர்ந்த மற்றொரு மாணவரின் பெற்றோர் சமிகா பர்வீனின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு தங்களது செலவில் அனுப்பி வைத்தனர். அந்தப் போட்டியில் கலந்து கொண்ட மாணவி இந்திய விளையாட்டு ஆனையம் 4.2 மீட்டர் நீளம் நிர்ணயித்த நிலையில் 5 மீட்டர் தாண்டி சாதனை புரிந்தார். இதை தொடர்ந்து போலந்தில் நடைபெற உள்ள சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என மகிழ்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் இந்திய விளையாட்டு கழகம் தனியாக ஒரு பெண்ணை அனுப்ப முடியாது என்ற காரணத்தால் அவருக்கு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழை மாணவி சமிகா பர்வீன் சர்வதேச தடகள போட்டியில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை பலமுறை வலியுறுத்தியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மாணவி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரபாகரன் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி மகாதேவன் தடகளப் போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், இந்த உத்தரவைத் தொடர்ந்து கடையாலுமூட்டில் உள்ள சமீகபர்வின் வீட்டினர் மற்றும் உறவினர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு சென்னை சென்று அங்கிருந்து இந்திய விளையாட்டு கழக வழிகாட்டுதலின்படி போலந்துக்கு செல்ல உள்ளார்.

Tags:    

Similar News