குழித்துறை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி - 5 நாட்களுக்கு பிறகு கைது.

குமரியில் குழித்துறை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி 5 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்

Update: 2022-04-21 08:30 GMT

போலீஸாரால்  கைது செய்யப்பட்ட தப்பியோடிய கைதி பாபு என்ற சாக்கன் பாபு( 49), 

கேரள மாநிலம் பாறசாலை அடுத்துள்ள இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் பாபு என்ற சாக்கன் பாபு( 49), இவர் திருவனந்தபுரம் மத்திய சிறையில் கொலை வழக்கில் தண்டனை கைதியாக உள்ளார். 

இவர் மீது குமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்திலும் கொலை வழக்குகள் உள்ளன.இந்த வழக்கு பதிவின் படி குழித்துறை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.இதனை தொடர்ந்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்த 2 போலீசார் குற்றவாளி பாபுவை பேருந்து மூலம் கடந்த 11ஆம் தேதி குழித்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.அப்போது குற்றவாளியை நீதிமன்றத்திற்குள் கொண்டு செல்ல கையில் கிடந்த விளங்கினை அகற்றியுள்ளனர்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட குற்றவாளி பாபு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் பாபுவை துரத்தி சென்றனர், ஆனால் பாபு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதனை தொடர்ந்து மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் பாபுவை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் கேரள எல்லைப் பகுதி காவல் நிலையங்கள் மற்றும் திருவனந்தபுரம் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. கொலைக் குற்றவாளி தப்பி ஓடிய விவகாரம் மார்த்தாண்டம் களியக்காவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி பாபு நாகர்கோவிலில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் நாகர்கோவிலில் வைத்து பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News