குமரி கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கிய கடல் ஆமை
குமரி கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கிய கடல் ஆமையால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.;
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை.
கொரோனா ஊரடங்கு கட்டுபாடு விதிமுறைகளை தமிழக அரசு விலக்கியதை தொடர்ந்து சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அருகே இறந்த நிலையில் சுமார் 25 கிலோ எடையுள்ள ராட்சத கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது.
இதை பார்த்த சுற்றுலாப் பயணிகள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இறந்த ஆமையை கரையில் ஒதுக்கி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வனத்துறையினர் ஆமையை மீட்டு வாரியூர் கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
கடந்த வாரமும், இதே போன்று ஆமை இறந்த நிலையில் ஒதுங்கியது. அதேபோல் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தொடர்சியாக இது போன்று நடப்பதால் கடல் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கடலில் ஏற்படும் மாற்றங்களால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.