முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க.. சாலை பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

குமரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கூறி சாலைப் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2021-12-13 14:30 GMT

சாலையின் இருபுறங்களிலும் ஆக்ரமிப்புகள் உள்ளனவா என்று நில அளவை செய்த அதிகாரிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட கலிங்கராஜபுரம் பகுதியில் இருந்து கோதேஷ்வரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 9 வருடங்களாக சீரமைப்பு பணி நடைபெறாமல் சீர்குலைந்து இருந்து வந்தது.

இதனை பயன்படுத்தி கொண்ட ஒரு சிலர் சாலையை இருபுறங்களிலும் ஆக்ரமித்து குடியிருப்பு வீடுகள் கட்டியும் கடைகள் அமைத்தும், மதிற்சுவர்கள் கட்டியும் வைத்துள்ளனர்.

இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலை காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்குலைந்து கிடக்கும் சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இந்த சாலைப்பணி ஆக்ரமிப்புகளை அகற்றியபின்பு செய்யகேட்டு ஊர்மக்கள் சார்பில் பேரூராட்சி அலுவலரிடம் பல மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஊர்மக்கள் ஒன்றிணைந்து சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கிள்ளியூர் நில அளவையர், வருவாய் அலுவலர் மற்றும் ஏழுதேசம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சாலையின் இருபுறங்களிலும் ஆக்ரமிப்புகள் உள்ளனவா என்று நில அளவை செய்தனர்.

இது குறித்து புகார் ஏழுதேசம் பேரூராட்சி அலுவலருக்கு தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News