குமரி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம்

குமரி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ்.

Update: 2021-05-09 10:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய குழித்துறை மற்றும் தக்கலை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் நோயை தடுக்க தமிழ்நாடு அரசு, போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற மருத்துவமனை கட்டணத்தை அரசே காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களாகவே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு உள்ளது. குமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முழுமையாக அளிக்கப்பட்டு நோய் முற்றிலும் குணமான பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை .

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் நலன் கருதி செயல்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர், மாநகராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர். பொதுமக்கள் இதனை உணர்ந்து முகக் கவசங்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து விழிப்புடன் இருந்து கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றிட முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் .

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் குமரியில் தக்கலை மற்றும் குழித்துறை ஆகிய மருத்துவமனைகளில் ஆக்சிசன் தயாரிப்பு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News