மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளர்கள்

குமரியில் ஆய்வு பணிகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரை மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

Update: 2021-08-01 11:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் கீழ் சுமார் 250 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்,  கொரானா தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தற்காலிகமாக  பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த், ஆய்வு பணிக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வந்திருந்த நிலையில், ஆட்சியரை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கூடி நின்று, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது தற்காலிக பணியில் இருந்து நீக்கிவிடக்கூடாது என்றும், மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு உரிய வாக்குறுதிகளை தரமறுப்பதாகவும்,  ஆகவே, நீங்கள் எங்களுக்கு வாக்குறுதியை அளிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, இது குறித்து தமிழக அரசிடம் தெரிவிப்பதாகவும், தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் வாக்குறுதி அளித்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News