டவ்-தே -மகளின் திருமணத்திற்கு வந்த கப்பல் ஊழியர் புயலில் சிக்கி மாயம்.

Update: 2021-05-18 13:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பரதர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஹரிபால் சேவியர் 60. இவருக்கு சுபா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பலில் மோட்டார் ஆபரேட்டர் ஆக பணியாற்றி வந்தார்.

இவரது மூத்த மகளின் திருமணம் இந்த மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு அவர் ஊருக்கு வருவதற்காக மங்களூரில் இருந்து கொச்சி வந்த கப்பலில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கப்பலிலிருந்து சேவியர் கடலுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

அவரை அந்த கப்பலில் இருந்தவர்கள் தேடியுள்ளனர். மேலும் இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தேடிய பிறகும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் இரண்டு நாட்கள் ஆனதால் அவரை தேடும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக சொந்த ஊர் வந்த போது கடலில் விழுந்து மாயமான ஹரிபால் சேவியரை மத்திய மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News