மனைவியை கொலை செய்து விட்டு தூங்குவதாக கூறி நாடகம் ஆடிய கணவன்

நாகர் கோவிலில் மனைவியை கொலை செய்து விட்டு தூங்குவதாக கூறி நாடகம் ஆடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-13 14:10 GMT
கொலை செய்யப்பட்ட ரெஜினா பானுவுடன் முகமது உசேன்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன்(வயது29). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி ரெஜினா பானு(26). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைக்காக வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெஜினா பானு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீசாரின் விசாரணையில், மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் முகமது உசேனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முகமது உசேன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் எனக்கும், ரெஜினா பானுவுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்போது நான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்று விட்டு வந்தபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்வதாக கூறி கழுத்தில் துணியை வைத்துக்கொண்டு என்னை மிரட்டினார்.  நான் அவளை சமாதானம் செய்தேன். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் எனது மனைவியை கழுத்தை நெரித்தேன். இதில் அவள் இறந்துவிட்டாள். உடனே அவளை தூங்குவதுபோல் போட்டுவிட்டு நானும் தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர். அப்போது தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டனர். அப்போது குழந்தைகளிடம் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் தூங்குவதாக கூறினேன். பின்னர் ரெஜினா பானுவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் என கூறியுள்ளார். 

கைது செய்யப்பட்ட முகமது உசேனை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி  நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். மனைவியை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய சம்பவம் நாகர்கோவிலில் பெரு பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News