புகார் அளித்தவர்களிடம் நானே போன் செய்து விசாரிப்பேன்: குமரி எஸ்.பி அதிரடி

காவலர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க புகார் அளித்தவர்களிடம் நானே போன் செய்து விசாரிப்பேன் என குமரி எஸ்.பி அறிவித்துள்ளார்.

Update: 2022-04-09 12:15 GMT

தொலைந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அதிகாரிகளுக்கு முன் உதாரணமாக இருந்து வருவதோடு பொதுமக்களிடையே பெரும் மதிப்பு கொண்ட ஒரு அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே இன்று மாலை நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்தில் வைத்து மாவட்டம் முழுவதும் தொலைந்த செல்போன்கள் மீட்கப்பட்டு  செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 111 செல்போன்களை பொதுமக்களிடம் வழங்கினார், தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது காவல் நிலையத்தில் வரும் புகார்களை நானே தினமும் மாலை பொதுமக்களிடம் போன் செய்து விசாரிப்பேன், எனவே காவலர்கள் யாரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்க வாய்ப்பில்லை என்றார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குமரி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி 5 லட்சம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதனிடையே கோட்டார் காவல்நிலையத்தின் உள் துணிகளால் பந்தல் அமைத்து பேனர்கள் வைத்து தொலைந்த செல்போன்களை வாங்க வந்த பொதுமக்களுக்கு டீ, காப்பி, வடைகளை கொடுத்து செல்போன்களை வழங்கியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News