காதலிக்க மறுத்த மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சாேவில் வாலிபர் கைது

குமரியில் காதலிக்க மறுத்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சாே சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2021-09-24 06:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை கோட்டார் கம்பளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சந்துரு என்பவர் தினசரி பின்தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நடுரோட்டில் வழிமறித்த சந்துரு தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார், ஆனால் மாணவி மறுக்கவே அவரது கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

மாணவி சந்துருவின் பிடியிலிருந்து தப்பி சென்று தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார், இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கண்மணி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர்.

Tags:    

Similar News