குமரி திரும்பிய முன்உதித்த நங்கை அம்மன்: துப்பாக்கி ஏந்தி மரியாதை

நவராத்திரி முடிந்து குமரிக்கு திரும்பிய, முன் உதித்த நங்கை அம்மனுக்கு, மாவட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை அளித்தனர்.

Update: 2021-10-20 13:00 GMT

சுசீந்திரம் வந்த முன்உதித்த நங்கை அம்மன் சுவாமிக்கு, குமரி மாவட்ட காவல்துறையினரின் துப்பாக்கி ஏந்திய மரியாதை அளித்தனர்.

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் ஆட்சி காலமான, 1840 முதல் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்பநாபசுவாமி கோவிலில், கொலு மண்டபத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி விழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்பநாபாபுரம் அரண்மனையில் உள்ள தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன் உதித்த நங்கை அம்மன் ஆகிய சுவாமி சிலைகள்,  அரச குடும்பத்தின் முழு ராஜ மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டு கொலுவில் வைப்பது வழக்கம்.

மன்னர் ஆட்சி மறைந்து மக்கள் ஆட்சி அமைந்த பின்னரும் தமிழக கேரளா அரசின் ஒத்துழைப்புடன் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 3 ஆம் தேதி,  தமிழக - கேரளா போலீசாரின் துப்பாக்கி ஏந்திய முழு மரியாதையுடன் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளுடன் சென்ற சுவாமி சிலைகள் நவராத்திரி விழாவிற்கு பின்னர்,  மீண்டும் குமரிக்கு கொண்டு வரப்பட்டது.

முன்னதாக,  இரு மாநில எல்லையான களியக்காவிளையில் கேரளா மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதைக்கு பின்னர்,  கேரளா அரசு அதிகாரிகள் சுவாமி சிலைகளை,  முறைபடி தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட சிலைகள் இன்று அந்தந்த கோவில்களில் வைக்கப்பட்டது.

அதன்படி, சுசீந்திரம் வந்த முன்உதித்த நங்கை அம்மன் சுவாமிக்கு, பெருந்திரளாக பக்தர்கள் கூடி நின்று வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து குமரி மாவட்ட காவல்துறையினரின் துப்பாக்கி ஏந்திய மரியாதைக்கு பின்னர், 13 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமி விக்ரகம் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News