ரயிலில் தவறவிட்ட 46 பவுன் தங்க நகை மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்

குமரியில் ரயில் பயணி தவறவிட்ட 46 பவுன் தங்க நகை கொண்ட பையை 1 மணி நேரத்தில் மீட்டு கொடுத்தனர் ரயில்வே போலீசார்.

Update: 2021-11-26 13:45 GMT

ரயிலில் பயணி தவறவிட்ட 46 பவுன் தங்க நகையை 1 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த ரயில்வே போலீசாருக்கு பாெதுமக்கள் பாராட்டு.

சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சரவணன் (38) என்பவர் குடும்பத்தினருடன் பயணம் செய்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் தனது மனைவியின் 46 பவுன் நகைகளையும் கையுடன் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பைகளையும் இறக்கி வைத்தனர், அப்போது மறதியாக நகைகள் இருந்த பையை ரயிலில் விட்டுவிட்டனர். இந்நிலையில் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி சென்றுவிட்டது. தங்களது பைகளின் எண்ணிக்கையை சரவணன் சோதனை செய்தபோது நகை இருந்த பையை ரயிலில் தவற விட்டது தெரிய வந்தது.

இது குறித்து சரவணன் நாகர்கோவில் ரயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா உடனடியாக கன்னியாகுமரி சென்ற ரயிலில் உள்ள போலீசாரிடம் பயணி தவறவிட்ட பை குறித்தும் அதில் இருந்த நகைகள் குறித்தும் தகவல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி ரயில்வே போலீசார் ரயில் பெட்டியில் இருந்த பையை மீட்டனர். மேலும் நகையுடன் இருந்த பையை நாகர்கோவில் ரயில்வே காவல் நிலையம் கொண்டு வந்து இன்ஸ்பெக்டர் சுஜாதா முன்னிலையில் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News