பாதாள சாக்கடை திட்ட பணிகளால் போக்குவரத்தில் மாற்றம் : வாகன ஓட்டிகள் அவதி

குமரியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துவருகின்றனர்

Update: 2022-03-19 13:00 GMT

நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கி கடந்த 10 வருடங்களை கடந்தும் முடிவில்லாமல் நடைபெற்று வருகிறது.

தற்போது நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயம் முதல் கம்பளம் ரோடு வரை உள்ள பகுதியில் பாதாள சாக்கடை பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக சாலையின் நடுவே ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது.

இதனால் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அனைத்து வாகனங்களும் சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம், பீச் ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு செல்கிறது.கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் கோட்டார், பீச் ரோடு, ஆயுதப்படை மைதானம், பொன்னப்பநாடார் காலனி, ராமன்புதூர் வழியாக செட்டிகுளம் வந்தடைகிறது.

இதனால் காலை, மாலை நேரங்களில் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது, இதனை சரி செய்ய பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.இருப்பினும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்களில் வருவோர் சிக்கி தவித்து வருகின்றனர், மேலும் அந்த சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் இயக்கப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பாதிப்பிற்கு ஆளாகி வருகிறார்கள்.இதனிடையே கம்பளம் சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News