ரஜினிகாந்த் தான் கடவுள் : போலீசாரை தலைசுற்ற வைத்த மன நோயாளி

ரஜினிகாந்த் தான் கடவுள், மக்களை காப்பாற்ற அவர் சீக்கிரம் வருவார் என கூறி போலீசாரை தலைசுற்ற வைத்த மன நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-12 05:45 GMT

ரோட்டில் நின்று தனியாக பேசிய மனநோயாளி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையின் நடுவே திடீரென இளைஞர் ஒருவர் வந்து நின்றுகொண்டு நடிகர் ரஜினிகாந்தை புகழ்ந்து தன்னைத் தானே பேசிக் கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த இளைஞரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர், எனினும் தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தான் கடவுள், மக்களை காப்பாற்ற அவர் சீக்கிரம் வருவார் என கூறினார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் விசாரித்த நிலையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனிடையே அவரிடம் சாதுர்யமாகப் பேசிய போலீசார் அவரை சாலையோரமாக அழைத்து வந்து விசாரித்த போது அவர் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் கடுக்கரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பதும் இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர் குடும்பத்தினரால் திருவனந்தபுரம் அருகே உள்ள பேரூர்கடை பகுதியில் அமைந்துள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கிருந்து தப்பித்த அவர் நாகர்கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

போலீசார் அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சித்த நிலையில் போலீசாரின் கண்பார்வையை இருந்து அவர் நழுவி மாயமானார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திடீரென ஒரு இளைஞர் சத்தம் எழுப்பி சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News