3 நிமிடத்தில் 300 திருக்குறளை ஒப்பித்து உலக சாதனை படைத்த 5 ஆம் வகுப்பு மாணவி

சிறு வயது முதலே வேகமாக பேசும் பழக்கம் கொண்ட இவர் திருக்குறள் மற்றும் பள்ளி பாட புத்தகத்தில் உள்ள பாடல்களை வேகமாக படிக்கும் திறன் கொண்டவராக காணப்பட்டார்.

Update: 2021-08-13 14:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் கனிக்க்ஷா, தின கூலி வேலை பார்க்கும் ஜான் அருண்குமார் மற்றும் கலையரசி தம்பதிகளின் மகளான இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 5 –ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலே வேகமாக பேசும் பழக்கம் கொண்ட இவர், திருக்குறள் மற்றும் பள்ளி பாட புத்தகத்தில் உள்ள பாடல்களை வேகமாக படிக்கும் திறன் கொண்டவராக காணப்பட்டார்.இவரது திறமையை பயனுள்ளதாக ஆக்கும் வகையில், அவரது பள்ளி ஆசிரியர்கள் இணைந்து திருக்குறளை பிழை மாறாமல் வேகமாக படிக்கும் செயல்திறனை கற்று கொடுத்தனர்.

அதன் படி , நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிரம்ப் உலக சாதனை அமைப்பின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்னிலையில் மாணவி கனிக்க்ஷா 3 நிமிடம் 7 செக்கண்டில் 300 திருக்குறளை ஒப்புவித்து சாதனை புரிந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தென்காசி பகுதியை சேர்ந்த மாணவி 200 திருக்குறளை 5 நிமிடங்களில் ஒப்பித்த நிலையில், அதனை முறியடித்து, கடந்த ஆண்டு நாகர்கோவில் தெங்கம்புதூர் அரசு பள்ளி மாணவி 230 திருக்குறளை 3 நிமிடங்கள் 27 நொடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்தார்.

இந்நிலையில் முந்தைய உலக சாதனையை முறியடித்து, திருக்குறளை ஒப்புவித்த மாணவி கனிக்க்ஷாவிற்கு, டிரம்ப் உலக சாதனை அமைப்பு கேடையமும் சான்றிதழும் வழங்கி கவுரவப்படுத்தியது, மேலும், கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News