குமரியில் 3வது நாளாக மாணவிகள் தாெடர் போராட்டம்: அரசு நடவடிக்கைக்கு கோரிக்கை

மூன்றாவது நாளாக பொதுதேர்வை புறக்கணித்த மாணவிகள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Update: 2021-09-06 12:00 GMT

தொடர்ந்து மூன்றாவது நாளாக மாணவிகள் தேர்வைப் புறக்கணித்து தேர்வு மையம் அமைந்துள்ள நாகர்கோவில் டி.வி.டி மேல்நிலைப்பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக மதிப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்து வருவதாகவும் தற்போதும் அதே முறை பின்பற்றப்படுவதால் அதிக அளவிலான மாணவர்கள் தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனால் கடந்த வியாழனன்று தேர்வு துவங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் தேர்தவைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வைப் புறக்கணித்து தேர்வு மையம் அமைந்துள்ள நாகர்கோயில் டி.வி.டி மேல்நிலை பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வரும் 24 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ள நிலையில் அனைத்து தேர்வுகளையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். தேர்வு மதிப்பீட்டு முறையை மாற்றவில்லை என்றால் தாங்கள் தோல்வி அடைவது உறுதி என கூறியும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையிலும் மாணவிகள் போராட்டத்தை கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News