அய்யா வைகுண்டர் அவதார தின பேரணி

Update: 2021-03-04 05:30 GMT

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். திருமாலின் அவதாரமாக அய்யா வைகுண்டரை அய்யா வழி பக்தர்கள் வழிபட்டு வரும் நிலையில் அவர் அவதரித்த நாளான மாசி மாதம் 20ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவாக அய்யாவழி பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.அய்யா வைகுண்டரின் 189 வது அவதார தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு நேற்றே திருநெல்வேலி, துாத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகர்கோவில் வந்தனர்.தொடர்ந்து இன்று காலை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமைபதி வரை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் முன்பாக அய்யாவின் அகிலதிரட்டு புத்தகம் பூப்பல்லக்கில் எடுத்து செல்லப்பட்டது.

கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரைகுளம் வழியாக சுவாமித்தோப்பு சென்றடைந்த இந்த பேரணியில் முத்துக்குடைகள், பலதரப்பட்ட மேளதாளங்கள் இடம்பெற்று இருந்தன, பேரணியில் இடம்பெற்று இருந்த குழந்தைகளின் கோலாட்டம் வழிநெடுகிலும் கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பேரணியை முன்னிட்டு நாகர்கோவில் முதல் சுவாமிதோப்பு வரையிலான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News