அனைத்து கோவில்களிலும் மெய்நிகர் வரிசை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு

அனைத்து கோவில்களிலும் மெய்நிகர் வரிசை திட்டத்தை செயல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது.

Update: 2022-04-27 09:00 GMT

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசனத்துக்காக தேர்ந்தெடுக்ககூடிய தேதி ,நேரம் ஆகியவற்றை முடிவு செய்து அதை முன்கூட்டியே மெய்நிகர் வரிசை திட்டம் வழியாக முன் பதிவு செய்து சாமி தரிசனம் செய்யும் திட்டத்தை கடந்த 2010 மற்றும் 2011-ம் ஆண்டு அப்போதைய சபரிமலை ஐயப்பன் கோயில் பாதுகாப்பு பொறுப்பு வகித்த A.D.G.P நடைமுறைப்படுத்தினார்.

அன்று இந்த திட்டத்தை தேவை உள்ள பக்தர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதும் என்று இருந்தாலும் தமிழகம், ஆந்திர, கர்நடாகா உட்பட பல மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் இதனை அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மெய்நிகர் வரிசை திட்டம் சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என ஆனது.

சபரிமலையில் காவல்துறை சார்பில் நடைமுறைபடுத்தப்பட்ட இந்த திட்டத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து கோவில்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள், தேவசம் போர்டு ஊழியர் சங்கம் மற்றும் சில பக்தர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் இந்த மனுவை ஏற்று கொண்டு இந்த திட்டத்தை தேவசம் போர்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூன்று மாதத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News