அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை , குமரி ஆட்சியர் உத்தரவு
குமரி கடற்கரைகள் மற்றும் ஆற்று படுகைகளில் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.;

கன்னியாகுமரி கலெக்டர் (பைல் படம்)
முக்கடல் சங்கமிக்கும் புனித இடமான கன்னியாகுமரி கடலில் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதோடு முன்னோர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் தமிழகம் மட்டும் அல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி கடல் மற்றும் குழித்துறை ஆற்று படுகையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக ஆடி அமாவாசை நாளில் கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளிலும் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்று படுகைகளிலும் தர்ப்பணம் செய்யவும், பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடை உத்தரவை பிறப்பித்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டார்.