நிபா வைரஸ் எதிராெலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

கேரளாவில் நோய் தொற்று குறையாத நிலையில் குமரி எல்லை சோதனை சாவடியில் சோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2021-09-07 13:30 GMT

கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் அங்கு தினசரி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து காணப்படுகிறது.

கேரளா மாநிலம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது நிபா வைரசும் கேரளாவை மிரட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழக கேரளா எல்லை சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக கேரளா எல்லை சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படாதது குமரி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நுழையும் 13 சாலை பகுதிகளில் சோதனை சாவடிகள் இருக்கும் நிலையில் பிரதான சோதனை சாவடியான களியக்காவிளை சோதனை சாவடியை தவிர வேறு எந்த சோதனை சாவடிகளிலும் சோதனைகள் நடைபெறுவது இல்லை.

களியக்காவிளை சோதனை சாவடியிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் வாகன சோதனை மட்டும் நடைபெறும் நிலையில் பேருந்துகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மூலம் ஏராளமானோர் எந்த தங்கு தடையும் இன்றி குமரி மாவட்டம் வந்து செல்வதால் குமரியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே கடந்த ஆட்சி காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதார துறை கொண்ட குழு அமைத்து சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News