பட்டாசுகள் வெடித்து சிதறியதில் நொறுங்கிய கண்ணாடிகள்: காவல் நிலையத்தில் பரபரப்பு

குமரியில் தக்கலை காவல் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட வெடிகள் வெடித்து சிதறியதில் காவல் நிலைய கண்ணாடிகள் நொறுங்கின.

Update: 2021-12-11 14:15 GMT

தக்கலை காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கண்ணாடிகள் உடைந்து சேதமானது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் நாட்டு பட்டாசுகள் காவல் நிலைய மேல் மாடியில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்யபடுவது வாடிக்கையாக அமைந்தது. இந்நிலையில் இந்த சட்ட விரோத விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்வதோடு விற்பனை செய்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்

அதன்படி தக்கலை காவல்நிலைய பகுதிகளில் கடந்த 2-வருடங்களுக்கு மேலாக சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்த தக்கலை போலீசார் அந்த பட்டாசுகளை காவல் நிலைய மேல் மாடியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அந்த பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது, இதில் காவல் நிலைய முன்பக்க கண்ணாடிகள் மற்றும் விசாரணைக்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கூரையால் ஆன நிழல் கூடமும் எரிந்து நாசமானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் விரைந்து செயல்பட்டு அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் அதிக சத்தத்துடன் நிகழ்ந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News