ஊரை விட்டு ஒதுக்கியவருக்கு பாதை தர மறுப்பு: இரு சமுகத்தினரிடையே மாேதல் வாய்ப்பு

குமரியில் சாதியை காரணம் காட்டி வழிப்பாதை தர மறுப்பு. மீண்டும் தலை தூக்குகிறதா தீண்டாமை என்ற அச்சம் எழுந்துள்ளது.

Update: 2021-09-13 14:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் அருகே அமைந்துள்ளது குன்னங்காடு கிராமம், இந்த கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் நெசவு தொழிலை பிரதானமாக செய்து வந்த நிலையில், அந்த தொழில் நலிவடைந்ததை தொடர்ந்து வறுமை காரணமாக பல குடும்பத்தினர் மாற்று தொழிலை நாடி சென்றனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டுமே நெசவு தொழிலை செய்து வந்த நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தை நெசவாளருக்கு பாவு, ஆத்து, நூல் இழைப்பு ஆகிய வகைகளுக்கு அரசு கொடுத்த நிலையில் நெசவாளர்கள் அந்த பகுதியில் ஒரு அம்மன் கோயிலையும் நிறுவி வழிபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் வறுமை காரணமாக நெசவு தொழிலை விட்டு மயானம் தோண்டுதல் முடி திருத்தும் தொழிலுக்காக ஒரு நெசவாளர் குடும்பம் கழிந்த 20-வருடங்களுக்கு முன் சென்ற நிலையில் அந்த குடும்பத்தை நெசவாளர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கிய வைத்தனர்.

இந்நிலையில் அந்த குடும்பத்தினருக்கு குன்னன்ங்காடு காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் அடைக்கலம் கொடுத்த நிலையில் அந்த குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுத்ததால் காமராஜர் பகுதிக்கு செல்லும் மற்ற சமூகத்தினருக்கு நெசவாளர்கள் வழிப்பாதை கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.

இதனால் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தோளிலேயே சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது, தங்களுக்கு வழிப்பாதை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என அனைவருக்கும் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தாங்களே அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைக்க காமராஜர் நகர் பகுதி மக்கள் திட்டமிட்டனர்.

அப்போது நெசவாளர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய நெசவாளர்கள் அரசு புறம்போக்கு நிலம் நெசவாளர்களுக்கு மட்டுமே என்றும் இதில் சாலை அமைக்க அனுமதிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி உள்ளனர்.

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது, தொடர்ந்து அப்பகுதியில் வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டு பிரச்னையை தவித்தனர். இதனிடையே இருதரப்பிலும் மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் சாலை அமைக்க வந்த இரண்டு வாகனத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி அறிவுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் முடி திருத்தும் தொழிலை காரணம் காட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு அந்த குடும்பத்திற்கு ஆதரவு கொடுத்த சமூகத்திற்கும் வழிப்பாதை தர மறுக்கும் மற்றொரு சமூகத்தால் மீண்டும் தீண்டாமை தலை தூக்குகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News