குமரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, விவசாயிகள் மகிழ்ச்சி

குமரியில் விடாது பெய்து வெளுத்து வாங்கும் கனமழையால் அணைகள் நிரம்பி வருகின்றன, இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2021-08-30 13:00 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் வெயில் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் பெரும் சிரமம் அடைய செய்த நிலையில் நாகர்கோவில், தக்கலை, ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணை பகுதியில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புத்தன் அணையில் 26 மில்லி மீட்டரும், பாலமோரில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் பரவலாக மழை நீடித்து வருவதன் காரணமாக மாவட்டத்தில் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, முக்கடல் அணை உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

அதன்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 44.79 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 969 கன அடியாக உள்ளது,

இதேபோன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 63 அடியாக உள்ளது இங்கு வினாடிக்கு 455 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேவை நிவர்த்தி ஆவதோடு விவசாய தேவைகளும் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News