முதல்வர் படம் ஆபாசமாக சித்தரிப்பு - தீயணைப்புத் துறை காவலர் மீது வழக்கு பதிவு

Update: 2021-05-23 14:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஹெரால்ட், 43 வயதான இவர் தக்கலை தீ அணைப்பு துறை காவல் நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். கடந்தத 15-நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்து வீட்டு தனிமையில் இருந்த அவர் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பல பதிவுகளை பதிவேற்றி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவர் நேற்று முன்தினம் முதல் மீண்டும் தக்கலை தீயணைப்பு காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்த நிலையில் நேற்று அவரது முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை ஆபாசமாகவும் அதன் அருகே அமைச்சர் துரைமுருகன் நிற்பது போன்றும் சித்தரித்து பதிவேற்றியுள்ளார்.

இதை முகநூலில் பார்த்த தக்கலை தி.மு.க வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ஜெகதேவ் முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றி களங்கம் விளைவித்த தக்கலை தீயணைப்பு துறை ஊழியர் ஹெரால்ட் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கூறி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஹெரால்ட் மீது 505 IPC & 67 IT Act ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே ஹெரால்ட் தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர், அரசு பணியில் இருக்கும் ஒருவரே தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரின் படத்தை ஆபாசமாக பதிவேற்றி வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News