நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்களின் சேவை இரத்து

ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணி முடிவடையாததால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையேயான 4 இரயில்களின் சேவை தொடர்ந்து இரத்து.

Update: 2021-11-22 14:30 GMT

கனமழையால் இரயில் தண்டவாளம் பகுதியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 72 மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் அருகே நுள்ளிவிளை பகுதியில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஆற்று நீரானது இரயில் தண்டவாளத்தை ஆக்கிரமித்தது. மேலும் நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையேயான பல்வேறு இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டு இரயில் தண்டவாளம் பாதிப்பிற்கு உள்ளானது.

இந்நிலையில் கனமழையால் இரயில் தண்டவாளம் பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்படாத நிலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்களின் சேவை இரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி குருவாயூர் - சென்னை விரைவு ரயில்(16128) இன்று குருவாயூர் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுவதாகவும், சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயில் (12633) நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும் என்றும் தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.

இதே போன்று பெங்களூரு கே.எஸ்.ஆர். - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (16526) சேவை, கொல்லம் - குமரி இடையே இன்று ரத்து செய்வதாகவும் மதுரை - புனலூர் சிறப்பு ரயில்(06729) சேவை திருநெல்வேலி - புனலூர் இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தண்டவாள பகுதியில் சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்திய பிறகே ரயில் சேவை தொடங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ள நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ள இந்த ரயில் சேவை நிறுத்தம் காரணமாக ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News