பெண்களின் சபரிமலை - மண்டைக்காடு கோவில் கொடை விழா தொடங்கியது
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் புகழ்பெற்ற கோவிலாகும் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி கொடை விழா பிரசித்தி பெற்ற விழாவாக அமைகிறது.
இதனிடையே மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த வருடத்திற்கான மாசி கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பல்வேறு ஆகம பூஜைகளுக்கு பின்னர் நடைபெற்ற கொடைவிழாவை கோவில் பிரதான தந்திரி மகாதேவர் ஐயர் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி எம்.பி விஜய் வசந்த், மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் கொடை விழாவில் தினமும் உஷ பூஜை, உச்சகால பூஜை, சாயரஷ்ய பூஜை, அத்தாள பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல், தங்க தேர் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-வது நாள் இரவு பிரசித்தி பெற்ற ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.