குமரியில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

குமரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலி. சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

Update: 2022-01-03 15:15 GMT

குமரியில் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் பென்சேக்.

கன்னியாகுமரி மாவட்டம் திட்டங்கனாவிளை பகுதியை சேர்ந்த பென்சேக், சிஜு என்ற இரண்டு இளைஞர்கள் புதுக்கடையில் இருந்து தங்களது வீடு அமைந்திருக்கும் பகுதியான திட்டங்கனாவிளைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சடையன்குழி பகுதியில் நிறுத்தி இருந்த ஆட்டோ ஒன்று திடீரென எதிர்திசையில் செல்வதற்காக திரும்பி உள்ளது. உடனே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் ஆட்டோ மீது மோதாமல் இருக்க முயன்றனர். ஆனால் ஆட்டோ சாலை முழுவதையும் மறைத்து நின்றிருந்ததால் இளைஞர்களின் வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையின் ஓரம் இருந்த தண்ணீர் டேங்க் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவரான பென்சேக் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு போராடியபடி கிடந்தார். உடனே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடியபடி கிடந்த சிஜுவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த மாணவரான பென்சேக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்பட காரணமான ஆட்டோ குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விபத்து குறித்த நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News