நம்பியூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது: போலீசார் விசாரணை

நம்பியூர் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-11 09:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் குருமந்தூர் ரோடு மாரியம்மன் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

போலீசாரை கண்டதும் பின் பகுதியில் அமர்ந்திருந்தவர் இறங்கி தப்பி ஒடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் சுமார் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்தபோது, அவர் நம்பியூர் அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (32) என்பதும், அவருடன் உடையகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் வந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிரகாசை கைது செய்தனர். தப்பி ஓடிய கார்த்தியை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News