தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பெண், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

Update: 2024-04-30 11:45 GMT
யானை தாக்கி உயிரிழப்பு (பைல் படம்).

Erode News, Erode Today News - தாளவாடி அருகே கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பெண், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த காட்டு யானைகள், பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து, விவசாயத் தோட்டங்களில் உள்ள பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது

இந்நிலையில், தாளவாடி அருகேயுள்ள ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜோராஒசூர் கிராமத்தில் சுந்தரி (வயது 43) என்பவர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை எதிர்பாராத விதமாக அவரை தாக்கியது. இதில், அவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை  ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுந்தரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஜீரகள்ளி வனத்துறையினர் மற்றும் தாளவாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News