ஈரோட்டில் இந்திய உணவுக்கழகம் சார்பில் வார விழா: எம்எல்ஏ சரஸ்வதி பங்கேற்பு

ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கில் பொதுமக்களுக்கு 15 லட்சம் டன் அரிசி, கோதுமை வினியோகம்.

Update: 2021-11-24 11:00 GMT

மொடக்குறிச்சியில் நடைபெற்ற இந்திய உணவுக்கழகம் வார விழா.

மத்திய அரசின் ஆசாத் கா அம்ரூத் மகோத்சவ் திட்டத்தில், அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தலைமை வகித்தார். இதில் இந்திய உணவு கழக கோவை கோட்ட மேலாளர் ராஜேஷ் பேசியதாவது: இந்திய உணவு கழகம் சார்பில், கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அரிசி, கோதுமை வினியோகம் செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கின்போது உணவு பாதுகாப்பு நலத்திட்டம் அறிமுகமானது. ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. கோவை கோட்டத்தில் ஒன்பது மாவட்டங்களில் 6 லட்சத்து 2 ஆயிரத்து 600 டன் அரிசியும், 37 ஆயிரத்து 688 டன் கோதுமையும் வழங்கப்பட்டது. மேலும், 2021-ம் ஆண்டில் உணவு பாதுகாப்பு மற்றும் பொது வினியோக முறை திட்டத்தின் கீழ் 8 லட்சத்து 69 ஆயிரத்து 937 டன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது.

எனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் மொத்தம் 15 லட்சத்து 10 ஆயிரத்து 225 டன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ரத்தசோகை, நுண்ணூட்ட சத்து குறைபாட்டை போக்க வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. இதில் போலிக் அமிலம், இரும்பு சத்து, வைட்டமின் பி12 சத்துகள் அதிகமாகும். இந்த மாதத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு 1,663 டன் வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News