அந்தியூர் அருகே பர்கூர் தாமரைக்கரை ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய காத்திருக்கும் மலைவாழ் மக்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தாமரைக்கரை ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய மலைவாழ் மக்கள் காத்திருக்கின்றனர்.;
பர்கூர் தாமரைக்கரை ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்ய 22 கி.மீ பயணித்து வந்து வரிசையில் காத்திருக்கும் மலைவாழ் மக்கள்.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தாமரைக்கரை ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய மலைவாழ் மக்கள் காத்திருக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலையின் மேற்கு பகுதியில் ஒன்னக்கரை, தம்புரெட்டி, ஒசூர், ஆலனை, சின்ன செங்குளம், பெரிய செங்குளம், கொங்காடை உள்பட 15க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு அந்தந்த கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய கைரேகைகளை பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களுடைய கைரேகைகளை தாமரைக்கரையில் உள்ள ரேஷன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் 22 கிலோ மீட்டர் தூரம் ஏதாவது வாகனங்களில் பயணித்து தாமரைக்கரைக்கு குடும்பத்துடன் வந்து தங்களுடைய கைரேகைகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த ரேஷன் கடையில் கூட்டம் அதிகம் இருப்ப தால் கைரேகைகளை பதிவு செய்ய பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், 'அடர்ந்த வனப்பகுதியில் எங்கள் கிராமங்கள் உள்ளன. எங்களுடைய கிராமத்தில் இருந்து தாமரைக்கரைக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை. இதனால் கைரேகைகளை பதிவு செய்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் லாரி, சரக்கு வேன், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஏறி வருகிறோம்.
ஏராளமான பொதுமக்கள் வருவதால் நீண்ட வரிசையில் காத்து நின்று எங்களுடைய கைரேகைகளை பதிவு செய்கிறோம். இதில் தாமதம் ஏற்படுவதால் நாங்கள் மீண்டும் எங்களுடைய கிராமங்களுக்கு செல்வதில் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே எங்கள் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளிலேயே சிறப்பு முகாம்கள் அமைத்து கைரேகைகளை பதிவு செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.