அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடியில் நவ.,25, 26ல் பழங்குடியினருக்கான நலத்திட்ட முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டங்களில் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட முகாம் நவம்பர் 25, 26ம் தேதிகளில் நடக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;

Update: 2024-11-22 13:45 GMT

பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட முகாம் (பைல் படம்).

அந்தியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டங்களில் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட முகாம் நவம்பர் 25, 26ம் தேதிகளில் நடக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய பழங்குடியினர் தின விழா கொண்டாடும் விதமாக பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அந்தியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டங்களில் நவம்பர் 25,26ல் சிறப்பு முகாம் நடக்கிறது.

அதன்படி, வரும் 25ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அந்தியூர் வட்டத்தில் பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் குத்தியாலத்தூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியிலும், குன்றி ஊராட்சி மன்ற அலுவலக சமுதாயக் கூடத்திலும் நடக்கிறது. 

அதேபோல், வரும் 26ம் தேதி தாளவாடி வட்டத்தில் கேர்மாளம், வனச்சோதனைச் சாவடியிலும், தலமலை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியிலும், ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப் பள்ளியிலும் நடக்கிறது.

இந்த முகாம்களில் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கல்வி உதவித்தொகை, கிசான் கார்டு, கிசான் சம்மன், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை, பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News