கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

வடகிழக்கு பருவ மழை முடியும் வரை கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்.

Update: 2021-12-01 10:30 GMT

கொடிவேரி அணை.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்வார்கள்.‌ பவானிசாகர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் கொட்டி வருவதால் ஏற்கனவே நவம்பர் 30-ம் தேதி வரை கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. எனவே வடகிழக்கு பருவ மழை முடியும் வரை தடுப்பணையில் பொது மக்கள் குளிக்கவோ, கண்டுகளிக்கவோ தடை விதிக்கப்படுகிறது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News