அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

Tomorrow Varattupallam Dam Water open புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Update: 2024-03-09 06:00 GMT

வரட்டுப்பள்ளம் அணை.

Tomorrow Varattupallam Dam Water open

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 33.33 அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் அந்தியூர் பகுதியில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி, பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு செல்லும். வரட்டுப்பள்ளம் அணை தண்ணீர் மூலம் 3 ஆயிரம் ஏக்கரும், ஏரிகள் மூலம் 7 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், ஆண்டுதோறும் மாசி மாதம் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில் வரட்டுப்பள்ளம் அணை பாசன விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் அணையிலிருந்து நாளை முதல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, அந்தியூர் வட்டம் வரட்டுப்பள்ளம் அணை புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 10.03.2024 முதல் 17.06.2024 முடிய வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து மொத்தம் 96.940 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திலுள்ள சங்கராபாளையம் எண்ணமங்கலம் மற்றும் அந்தியூர் “அ” கிராமங்களிலுள்ள 2,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News