தக்காளி விலை கிடுகிடு உயர்வு: ஈரோட்டில் ஒரு கிலோ ரூ.80 ஐ தொட்டது

தொடர்மழையால், ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலையும் அதிகரித்துள்ளது.

Update: 2021-11-06 05:45 GMT

ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு, தாளவாடி மற்றும் கிருஷ்ணகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.600-க்கு விற்பனையானது. 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.850-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லரை விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது.

இந்நிலையில்,  கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலையும் அதிகரித்துள்ளது. இன்று 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.850 முதல் ரூ. 900 வரை விற்பனையானது. மேலும் 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.1500 முதல் ரூ.1600 வரை விற்பனையானது.

இதனால்,  சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 80-க்கு விற்பனையானது. காய்கறி மொத்த மார்க்கெட்டிலேயே தக்காளி சில்லரை விலையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுவதால், மற்ற இடங்களில் மேலும் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News