நடப்பாண்டில் முதல் முறையாக ஈரோட்டில் 103.28 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு

நடப்பாண்டில் ஈரோட்டில் முதல் முறையாக 103.28 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.;

Update: 2025-03-29 15:10 GMT

நடப்பாண்டில் ஈரோட்டில் முதல் முறையாக 103.28 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

கோடை காலம் என்பது பொதுவாக ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். கோடை காலம் தொடங்க இன்னும் 15 நாட்களுக்கு மேலாக இருக்கும் நிலையில் தற்போதே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது. மேலும், தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் காலை 11 மணி முதல் மதியம் 4 வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று (மார்ச் 29) சனிக்கிழமை புதிய உச்சமாக 39.6 டிகிரி செல்சியஸ் (103.28 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.

இதனால், மதிய நேரம் வெளியே செல்லும்போது தீப்பிடிப்பது போல் இருந்து வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்யப் போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்

Similar News