ஈரோடு அருகே சிவகிரியில் முதிய தம்பதியை கொன்ற கொலையாளிகள் தான் பல்லடத்திலும் 3 பேரை கொன்றனர்: ஐ.ஜி. செந்தில்குமார் பேட்டி!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் முதிய தம்பதியை கொன்ற கொலையாளிகள் தான் பல்லடத்திலும் 3 பேரை கொன்றதாக ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் பேட்டியளித்துள்ளார்.;

Update: 2025-05-19 06:00 GMT

சிவகிரியில் முதிய தம்பதியை கொன்ற கொலையாளிகள் தான் பல்லடத்திலும் 3 பேரை கொன்றதாக ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் பேட்டியளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் இன்று (மே.19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது, சிவகிரி அருகே உள்ள மேகரையான் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் ராமசாமி (வயது 72) - பாக்கியம் (63) ஆகியோரை கொலை செய்து 10¾ நகைகள் கொள்ளை போனது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க 12 தனிப்படை அமைத்து பழங்குற்றவாளிகள், சிசிடிவி போன்றவை கொண்டு விசாரணை நடத்தி வந்தோம்.

அறச்சலூர் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன் 48), ரமேஷ் (52), மாதேஸ்வரன் (54) ஆகியோர் சேர்ந்து இக்கொலையை செய்தது தெரியவந்தது. இவர்களிடம் இருசக்கர வாகனங்கள், மரக்கைப்பிடி, கையுறை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ராமசாமி செல்போன் இவர்களிடம் தொலைப்பேசி இருந்தது.

கால் தடங்கள் அடிப்படையில் கொலை குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்தோம். கொலை சம்பவம் முன்பு 15 நாட்கள் நோட்டமிட்டது தெரியவந்தது. கொலையாளிகள் மூன்று பேரும் கொள்ளையடித்த நகைகளை சென்னிமலைபாளையத்தை சேர்ந்த ஞானசேகரன் உருக்கி கொடுத்து உள்ளார். அவரையும் கைது செய்து அவரிடம் இருந்து 82 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளோம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம், சேமலைகவுண்டன் பாளையத்தில் வசித்து வந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவரது மகன் செந்தில்குமார் (44) ஆகியோரை இதே பாணியில் கொலை செய்து அவர்களிடமிருந்து 5½ பவுன் நகையை கொள்ளையடித்ததையும் இவர்கள் ஒப்புக்கொண்டனர். 

மேலும், கொலையுண்டவர்களின் செல்போன் வைத்திருந்தனர். அதையும், பறிமுதல் செய்துள்ளோம். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடியிடம் உள்ளது. மேலும், இவர்களிடம் நடத்தி விசாரணையில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்த ஆதாரங்களை திரட்டி வருகிறோம். விசாரணை முடிவில் முழுமையான தகவல் வெளிவரும்.  

இவர்கள் 2015ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதாகி  9 மாதங்கள் சிறையிலிருந்து தெரியவந்துள்ளது. ஆச்சியப்பன் தேங்காய் உரிப்பது தோட்டத்தில் வேலை செய்வது போன்றவை போன்று நோட்டமிட்டு செய்து வந்துள்ளார். அதில் தனியாக வசிக்கும் தம்பதிகளை தேர்ந்தெடுத்து கூட்டாளிகளுடன் சதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 28ம் தேதி இரவு 12 மணி அளவில் இவர்கள் மூவரும் ராமசாமி-பாக்கியம் ஆகியோரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். கைதானவர்கள் மீது ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு காவல் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

தற்போது நான்கு பேரும் கைது செய்யப்பட்டு எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் இரண்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் நடக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களிடம் மேலும் பல வழக்கு தொடர்பாக விசாரிக்க உள்ளதால் நீதிமன்ற அனுமதியுடன் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது கோவை சரக டி.ஐ.ஜி சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, ஏடிஎஸ்பி விவேகானந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News