கொளுத்தும் கோடை வெயில் : ஈரோட்டில் நேற்று 104.36 டிகிரி வெயில் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.11) ஞாயிற்றுக்கிழமை 104.36 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் புழுக்கத்தினால் அவதியடைந்தனர்.;
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.11) ஞாயிற்றுக்கிழமை 104.36 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் புழுக்கத்தினால் அவதியடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் துவக்கத்தில் இருந்து வெயில் கொளுத்தியது. அதைத் தொடர்ந்து, வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றின் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை திசை மாறியதால் கடந்த சில நாட்களாக காலை முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 103.28 டிகிரியாக இருந்த வெயில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 104.36 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்தது. இந்தாண்டு கோடை வெயிலில் இதுவே அதிகபட்ச வெயிலாகும்.
தொடர்ந்து, நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.