சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி சித்தோடு அருகே வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே திருப்பூர் நோக்கி காரில் சென்ற சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் கொலை தொடர்பான வெளியான வீடியோ காட்சி படம்.
சித்தோடு அருகே திருப்பூர் நோக்கி காரில் சென்ற சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்யா (வயது 35). இவருக்கு சரண்யா என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். ஜான் மீது சேலம் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்பட குற்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி சரண்யாவும் திருப்பூர் நோக்கி காரில் வந்துள்ளனர். ஈரோடு நசியனூர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு கார் ஜான் கார் மீது மோதி நிறுத்தி உள்ளனர்.
அப்போது, காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் ஜானை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர். இதை தடுக்க முயன்ற ஜான் மனைவி சரண்யாவுக்கும் வெட்டுக்காயம் விழுந்துள்ளது.
இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலான போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.