அத்தாணி அருகே பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

அத்தாணி அருகே பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-04-25 02:32 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், இவரது மனைவி சத்யா (வயது 32), கடம்பூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்யாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சத்யா.இதனையடுத்து, ஈரோட்டில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சத்யா நேற்று முன்தினம் அத்தாணி கரட்டூரில் உள்ள தாய்மாமன் வீட்டிற்கு வந்துள்ளார், இந்நிலையில், நேற்று அதிகாலை பாத்ரூம் சென்ற சத்யா நீண்ட நேரம் ஆகியும் வெளிவராததால் சத்யாவின் தாய் மற்றும் தாய்மாமன் கதவை தட்டியுள்ளனர்.

உடனே பின்பக்கம் சென்று பார்த்த போது சத்யா பாத்ரூம் கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்கொலை செய்து கொண்ட சத்யாவுக்கு திருமணமாகி நான்கரை வருடங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News