கவுந்தப்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த நபர் கைது
பெருந்தலையூரில் ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்து, 660 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமை பொருள், கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் பெருந்தலையூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை சோதனை செய்ததில், 22 மூட்டைகளில் 660 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ரேஷன் அரிசி கடத்திய பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் மகன் அழகரசனை போலீசார் கைது செய்தனர். பின்னர், அரிசி மூட்டைகளுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.