ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் இளங்கோவன்: விரைவில் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் இளங்கோவனை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-01-21 05:28 GMT

சஞ்சய் இளங்கோவன்

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானதை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.

பதவியில் இருப்பவர் இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாளாகும், மேலும் அவை பிப்ரவரி 8-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 10-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் யாரை களமிறக்குவது என அந்தந்த கட்சிகள் மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, அதிமுகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சய் இளங்கோவன் ஈவிகேஎஸ் இளங்கோவனின் 2வது மகன் ஆவார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளங்கோவன் குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு வேட்பாளர் களம் இறக்கப்படுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News