கோபி அருகே நாயை கடித்து கொன்ற சிறுத்தையால் பொதுமக்கள் பீதி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே காவலுக்கு இருந்த நாயை சிறுத்தை கடித்து கொன்றதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2024-05-24 00:45 GMT

சிறுத்தை (பைல் படம்).

கோபி அருகே காவலுக்கு இருந்த நாயை சிறுத்தை கடித்து கொன்றதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கொங்கர்பாளையம் ஊராட்சி வெள்ளக்கரடு சமனாங்காட்டு தோட்டப் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, விவசாயியான இவர் வீட்டில் ஆடு மாடுகள் மற்றும் வளர்ப்பு நாயும் வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு பழனிச்சாமி விட்டிற்கு வெளியில் வந்து பார்த்து உள்ளார். அப்போது பழனிச்சாமி வளர்த்து வந்த நாய் அவரது வீடிற்கு அருகில், ஏதோ விலங்கு ஒன்று நாயின் வயிற்று பகுதியில் கடித்து குதறி இரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடைத்தது.

அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கிருந்து கால்தடம் மற்றும் நாய் கடிப்பட்டு இறந்து கிடந்ததை ஆய்வு செய்தனர். வனத்துறையினர் ஆய்வு செய்ததில் பழனிச்சாமி என்பவரின் வளர்ப்பு நாயை கடித்து கொன்றது சிறுத்தை தான் என்று தெரியவந்தது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News